Thursday, May 6, 2010

இறந்தவர்களில் செல்பேசி எண்..

இறந்தவர்களில் செல்பேசி எண்...

ஒரு நொடிப்பொழுதில்
வந்த அந்த அழைப்பு
ஒரு இரங்கல் செய்தி தாங்கி வந்தது...

இறந்தது போன அவருக்கான
வருத்தங்களோடு
கடந்து போகின்றன சில நாட்கள்...

அவரின் நினைவுகள்
அகன்று விட்டன..

மாதம் பல ஆகியும்
இறந்தவரின் பெயரும்
செல்பேசி எண்ணும்
அழிபடாமலே என்னுடன் உள்ளன..

ஒரு நாள் கனவில்
நான் அவரின் எண்ணிற்க்கு
அழைக்கிறேன்..

அவரோ சடலமாக
என் அழைப்பை பார்த்திருக்கும்
வேளையில் வந்தது விழிப்பு..

மற்றுமொரு பரபரப்பான நாளில்..
ஒரு நொடிப்பொழுதில்
வந்த அந்த அழைப்பு

இறந்தவரின் பெயர் தாங்கி..


நான் அழைப்பை ஏற்க்கவில்லை...


கார்த்தி...

Tuesday, January 12, 2010

என் தமிழ் வாழ்த்து….

எல்லோருக்கும் எல்லாம் அளித்த என் தமிழுக்கும், தமிழருக்கும் என் இதயம் கனிந்த

  • · தமிழர் திருநாள்
  • · தை திருநாள்
  • · உழவர் திருநாள்
  • · வள்ளுவர் தினம்
  • · மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

பல பல யுகங்களாய், கல் தோன்றி, மண் தோன்றா காலத்திலே முன் தோன்றியதாக கூறப்படும் என் தமிழுக்கும், என் தமிழை உணர்ந்தோருக்கும், அறிந்தோருக்கும், தமிழருக்கும், மற்றும் யாவரும் கேளிர் என் தமிழ் வாழ்த்து….

அறிவியல் அறிந்தோம்..

அன்பை மறந்தோம்…

மென்பொருள் எழுதினோம்…

தமிழ் எழுத்துகளை மறைத்தோம்…

மேலும் பணம் பெற்றோம்..

ஒழுக்கத்தை இழந்தோம்..

ஆண், பெண் கலந்தோம்

மக்கள் தொகை வளர்த்தோம்…

செல் பேசினோம்..

சொற்க்களை மறந்தோம்..

தொழில் நுட்பங்களை மணந்து

சொந்தங்களை விவாகரித்தோம்..

இலக்கியத்தை மறந்து

இணையத்தில் பறந்தோம்…

கவிதையை மறந்து

கதைகளை அளந்தோம்…

குறுந்தகவலில்

குற்றங்களை மறைத்தோம்..

காலம் உருண்டோடும் ….

கவலை பறந்தோடும் ….

தமிழ் அறியனை ஏறும்…

தமிழ் அறியனை ஏற்றும்…

ஈரம் பிறப்பில்

ஈழம் பிறக்கும்….

எம் தமிழர்தம் நெஞ்சில் ஈரம் பிறந்தால் ….

என்றும் தமிழோடு..

தி.கார்த்தி.

வளத்தூர்.

Tuesday, July 14, 2009

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!

இந்த வாரம் விகடனில் வந்த கடிதம்.

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ''கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்'' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்க ளுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்...

''போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!'' என்று கோவில்பட்டியிலும்...

''உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள் ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும் ஒரு காலத் தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.

சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். ''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல்அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!

30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!

எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ''இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் 'நம் பின் னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன.

''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதி களாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?

''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதைஎல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?'' என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே?

இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தைவிட அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும் எஸ்.டி.சோமசுந்தரமும் பேசினார்களே! 'இந்தியா படை எடுக்க வேண்டும்', 'ஜெயவர்த்தனாவைத் தூக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக்கொடுத்தார்கள். புறநானூற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே சொன்னார், ''அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாகப் பேச வரவில்லை.''

பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந் தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ''மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும் வேண்டாத வீரமாகத் தெரிகிறது.

பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, 'சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங் கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பாஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, 'உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக் கூடாதா?'' என்றால், 'என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக்கழித்தீர்கள். ''போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது 'மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள்.

நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக் கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்!

இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?

''மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து.''

தமிழீழம் குறித்து உங்களது கருத்து என்ன?

''இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து தான் என் கருத்து''.

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்?

''ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.''

உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? 'தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போலத் தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில் நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். எட்டுத் தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? 'நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களைத் தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என்று கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியாமல், உங்களைப் பிடித்து இழுத்தது எது? அல்லது யார்?

''நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடி யும்?'' என்று ஈழத் தந்தை செல்வாவிடம் இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக்கொண்டு, மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு கடைசிக் காலத் திலும் கருவறைப் போராட்டம் நடத்திய 'தமிழின அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூடப் பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறை யாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்க ளது ஆட்கள் மத்திய லகானைச் சுழற்றி வந்திருக்கிறார்கள். சோனியா உங்களைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். கேட்ட பதவிகள் கிடைக்கின்றன. மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில்தான் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என் றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணா வும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்குக் காட்டிக்கொடுக்கிறீர் கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவைத் தாரை வார்க்கும்போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும் 'விரும்பினால்தான் தண்ணீர் தருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது.

தெற்காசியாவின் அதிசயமாக பென்னி குக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப் பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. முதலமைச்சர் அச்சுதானந் தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையைக் கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமரப் பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரை முருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது.

''பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லூரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகைஈரமா கவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... அதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது...

ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

அன்புடன்,
ஈர விறகாக இருக்க முடியாத,
அரசியல் அறியாத் தமிழன்!
( நன்றி: விகடன் )

Tuesday, June 30, 2009

சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….

சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….

ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து கொள்கிறதாம்.

அடப் பாவிகளா…. ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ”இனவெறி” என்று கூச்சல் போட்டால்..…. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட..…. மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்…. என்று எந்த இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

ஆஸ்திரேலிய சாராயக்கடையில் குடித்துவிட்டு அலப்பரை செய்தபோது விழுந்திருக்கிறது முதல் உதை.

அதற்கே குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின் எச்சரிக்கை….

உள்துறை, வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின் கண்டனம்….

வட இந்திய தொலைக்காட்சிகளின் ஓலங்கள்….

இவற்றையெல்லாம் பார்த்தும் கொஞ்சம் கூட இரக்கம் வரவில்லை. மனம் இறுகிப் போயிருந்தது.

இதற்காக வேதனைப்படவுமில்லை.

கண்ணீர் வடிக்கவுமில்லை என்பதுதான் உண்மை.

காரணம்: எதை விதைக்கிறார்களோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

பத்துப் பதினைந்து நாட்கள்கூட ஆகவில்லை…. எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

வாயைத் திறக்கவில்லை பிரதமர்.

வாயைத் திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத் திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.

தமிழகத்தின் சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

தமிழகத்தின் தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு பிரபாகரனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின் கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள் கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில் மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

ஆலயங்களில் அழுது புலம்பினர்….

மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.

எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

வாயும் வயிறும் எரிகிறது.

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும் தமிழன்.

ஆனால்…. ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

எமது கண்ணீரைக் கூட கேலி செய்தது வடக்கத்திய மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

நாம் அழுது கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நாம் அப்படியா இருந்தோம்?

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம். கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும் கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

கார்கிலில் போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

அன்று அவர்கள் அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை. என்றும்தான்.

வளைகுடாப் போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக் கிருஷ்ணன்.

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது குமுறி எழுந்தது இந்திய அரசு.

ஆஸ்திரியாவில் இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே பற்றி எரிந்தது.

அடுத்த கணமே ”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது இந்தியப் பிரதமருக்கு

இவற்றையெல்லாம் பார்க்கும்போது

எனக்குள் எழும் கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

எங்களைப்பற்றி இந்தியா கவலைப்படாத போது

எதற்காக நாங்கள் இந்தியாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா” நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை” இந்திரா காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும் சரி…..

அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி..

ஆக

தமிழனென்று சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து செல்லுவோம்.

தமிழர்களது தலையை மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.

(நன்றி : தமிழக அரசியல் வார இதழ்)

Monday, May 25, 2009

தலைவன் இருக்கிறான் கலங்காதே....


என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே ... 

இருட்டினிலும் நீதி, மறையட்டுமே....

தன்னாலே வெளிவரும் கலங்காதே....

தலைவன் இருக்கிறான் ... 

மறக்காதே..... 

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை....


Friday, May 22, 2009

நாளைய வரலாறு கலைஞரை எப்படி அழைக்கும் .....

என்னடா தேசம்...

ஒரு கட்சி, மாற்றம் கொண்டுவரும் என என் முந்தைய தலைமுறை நம்பியகட்சி....
காங்கிரஸ் அரசை தமிழ் மாநில ஆட்சி கட்டிலில் இருந்து விரட்டிய கட்சி... 

இந்தி எதிர்ப்பு.... சுயமரியாதை..... இட ஒதுக்கீடு... பெரியாரிஸம்... என ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றத்தை தரும் என எதிர்பார்க்கப்பட்ட கட்சி....

திராவிட முன்னேற்ற கழகம்... 

எப்படி தன் தனி தமிழ்நாடு கொள்கையை அண்ணா விட்டு கொடுத்தாரோ, அப்படி தன் திராவிட கொள்கையையே விட்டு கொடுக்க துணிகிறார் இந்த கலைஞர். 

மத்திய அரசுக்கான தேர்தல் முடிந்த பின், ஆட்சி அமைக்கவும், மந்திரி பதவு பேரம் பேசுவதும் புதிதல்ல.

எல்லா கட்சிகளும், எல்லா வியாபாரிகளும் செய்வதுதான்..... லாபம் தானே முக்கியம்... அதில் ஒன்றும் மாற்றம் இல்லை..... 

ஆனால் அதை நம் கலைஞர் செய்த விதம், முகம் சுளிக்க வைப்பவை.... 

யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வேண்டும் என நம் தானை தலைவர் கேட்கிறார் தெரியுமா.

மகன், மகள், பேரன் (நல்ல வேலை மற்ற உறவுகள் மத்திய அமைச்சராக ஆர்வம் காட்டவில்லை), பாலு, ராசா... 

இதைல் மகன், மகள், பேரனுக்கு கேட்பது ஊரரிந்த உண்மை, ஒரு ராஜா தன் வாரிசுக்கு பதவி வாங்கி தர நினைப்பது இயல்பு... 

ஆனால் இந்த பாலுவும், ராசாவும், முந்தைய ஆட்சியில் இலஞ்ச குற்றச்சாட்டிலும், அதிகார துஷ்பரயோகத்திலும் மாட்டி கொண்டவர்கள். மன்மோகனாலும் நிராகரிக்கபடுபவர்கள்...

இவர்களுக்கு தானை தலைவர், வக்காலத்து வாங்குவது, இவர்கள் தி.மு.க வின் உண்மை தொண்டர்கள் என்பதனால் அல்ல.... 

இவர்களிடம் மறந்திருக்கும், இலஞ்ச பணமும், இரகசியங்களும்....

பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, உளியின் ஓசைக்கு வசனம் எழுதுவது போல பிரதமருக்கு தந்தி அனுப்பிய நம் திராவிட விடியல் இன்று தன் உறவுக்கும், கள்ள உறவின் உறவுக்கும், தன் குடும்ப பினாமிக்கும் பதவி வாங்க தில்லிக்கு பயணம்.... 

நீங்கள் இரு நூறு ரூபாய் கொடுத்தால் நாங்கள் அடுத்த தேர்தலிலும் விலை போய்விடுவோம்... 

அதிகம் பணம் கொடுத்தவர்கள் வெல்வார்கள்.

ஆனால் விலை போவது நாங்கள் அல்ல வரலாறு... 

நாளை வரலாறு உங்களை கல்லகுடி இரயில் வீரன் என்றோ, மிசா தியாகி என்றோ, தமிழின தலைவர் என்றோ, முத்தமிழ் அறிஞர் என்றோ பதிவு செய்யாது....... 

உங்கள் மிக சமீபத்திய செயல்பாடுகள் (2000ம் ஆண்டுக்கு பிறகு), உங்களை, சந்தர்ப்பவாதியாக, பச்சோந்தியாக, தமிழின துரோகியாக, குடுப்பம் மிரட்டலில் சிக்குண்ட அடிமையாகவே காலம் உங்களை பதிவு செய்யும்....... 

உங்களுக்கு ஏன் நாளைய வரலாறு பற்றிய கவலை என கேட்பீர்கள்....

ஒன்றை மறந்து விடாதீர்கள், நாளைய வரலாறு பற்றிய கவலை உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் திருக்குவளையில் இருந்து இரயில் ஏறி சென்னை வந்திருக்க மாட்டீர்கள்....

இவை உங்களுக்கு குற்றமாக படாமல் இருக்கலாம்..... 

யார் சொன்னால் உங்களின் குற்றங்களை ஒத்துக்கொள்வீர்கள்....

உங்கள் மனசாட்சியோ, உங்கள் மஞ்சள் பகுத்தறிவிற்க்கு அப்பாற்பட்ட பெரியார், அண்ணா, ஆன்மாக்களோ உங்களுக்கு சொல்லாது... 

நாளைய வரலாறு சொல்லும்..... 

உங்கள் நண்பர் எம்.ஜி.ஆருக்கு குடும்ப நெருக்குதல் இல்லாததை  நினைத்து நீங்கள் பொறாமைபடும் நாட்கள் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டது....

கலைஞரே...... 


உங்களை காட்டிலும், அறிவிலும், எழுத்திலும், பண்பிலும், அனைத்திலும் சிறிய  

கார்த்தி  

Tuesday, May 19, 2009

கெட்டுப்போன தேசத்தில் கெட்டுப்போன......

முடிந்தே விட்டது, பணநாயக தேர்தல். 

எல்லா கட்சிகளும் எல்லோருக்கும் பணம் கொடுத்தது. 

அதிகம் பணம் கொடுத்த கட்சி வென்றது..... 

இந்த நிலை நீடித்தால்... நாளை அமெரிக்காவோ, சீனாவோ ஏன் இலங்கையோ, தன் பினாமியை இங்கே அனைத்து தொகுதிகளிலும் நிறுத்தி ..... 

பணத்தை வாரி இறைத்து, வென்றால் இந்தியாவை ஆளப்போவது...... 

இந்தியர்தான் ஆனால் அவனின் மூளை அடகுவைக்கப்பட்டிருக்கும்..... 

பணம் தான் எல்லாம் என்றால், பிறகு எதற்க்கு இந்த கொள்கை, தேர்தல், மக்கள் ஆட்சி... 

எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன,,,,

நமக்கு 20 20 க்ரிக்கெட் முக்கியம், ரோபோ... சூட்டிங் முக்கியம், நமீதா உள்ளாடை முக்கியம்.....

போங்கடா..... ________________.

கெட்டுப்போன தேசத்தில் கெட்டுப்போன...... 

கார்த்தி.